மனஅமைதி:
வாழ்க்கையில் அயராது உழைப்பவராக இருந்தாலும், உலகத்தின் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் பெற்றவராக இருந்தாலும், அனைவரும் உண்மையாக விரும்புவது மனஅமைதிதான். உலகத்தின் அரியபெரிய சாதனைகளைச் செய்தவர்களும் மனஅமைதியை அரிதினும் அரிதாக நினைத்துத் தேடுகிறார்கள் என்பது பரவலாகக் கூறப்படுகின்ற உண்மை.
நம்முடைய மனம் என்பது நமக்குள்ளேயே இருக்கும்போது அந்த மனதின் அமைதியை ஏன் நாம் வெளியில் தேடுகிறோம்?
மனஅமைதியைப் பாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து வருவதாக நினைப்பதால், மன அமைதியைத் தரும் விஷயங்களும் வெளியிலேயே இருக்கும் என்று நினைத்து, அமைதியை வெளியே தேடுவதில் காலத்தைக் கடத்துகிறோம்.
அவரவர் வாழ்கின்ற சூழ்நிலை, அவற்றை எதிர்கொள்ளும் மனநிலை போன்றவை ஏற்படுத்தும் மாற்றங்களே மனவளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. உலகத்தின் பார்வையில் முழுமையான வளர்ச்சியடைந்த வெற்றியாளராக இருந்தாலும் அவருடைய மனஅமைதி என்பது தனிப்பட்ட உணர்வுகளைக் கையாளுகின்ற மனவளர்ச்சியின் அளவைப் பொறுத்தே அமைகிறது.
மனவளர்ச்சி:
மனவளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருக்கும் உணர்வுகளைக் கையாளுகின்ற அனுபவம் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறுகின்ற பயிற்சியாக உள்ளது. கடந்துபோன கடினமான சூழ்நிலைகள் காலத்தோடு கடந்துபோன நிலையிலும் அந்தச் சூழ்நிலையின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் பதிவுகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தினசரி செய்ய வேண்டிய தூய்மை பணிகள் வீட்டில் இருப்பதைப்போல நல்ல சிந்தனைகளினால் மனதை நித்தம் பராமரிப்பதும் அவசியமான வேலையாக இருக்கிறது. அதனோடு, தொடர்ந்து பயன்படுத்துகின்ற ஸ்விட்சில் ஏற்படும் கறை, நடுவில் பள்ளமாக இறங்கிவிட்ட சோபா, கருவிகளின் ரிப்பேர் என தேவைப்படும்போது கவனித்து செய்யவேண்டிய கூடுதலான பணிகளும் வீட்டில் இருக்கின்றன. அதுபோலவே மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சில பாதிப்புகளைக் கூடுதலாகக் கவனித்து அவ்வப்போது சரிசெய்ய வேண்டியதும் மிகமிக அவசியம் ஆகிறது.
அவ்வாறு, சுத்தம் செய்து, பழுது நீக்கி, சரி செய்யப்படுகின்ற வீடு பளிச்சென இருப்பதுபோல, மனதில் ஏற்பட்ட தொய்வுகளை நீக்கி மேலும் வலிமையாக, புத்துணர்ச்சியோடு இயங்குவதற்கு தெளிவான சிந்தனைகள் நமக்கு உதவுகின்றன. மனவளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் இந்தச் சிந்தனைகள் மனஅமைதிக்கு உதவும் பயிற்சிகளாகவும் செயல்படுகின்றன.
மனப்பயிற்சி:
கடந்தகாலத்தின் பதிவுகள்:
காலத்தால் கடந்துபோனதை மனதால் கடந்து வரவேண்டும் என்பதே மனஅமைதிக்கு முதன்மையான பயிற்சியாகக் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு கடந்துபோன நிகழ்வுகளைத் தேவையில்லை என்று தூக்கிப்போட முடியாமல் மனதில் தூக்கிச் சுமப்பவர்கள்தான் அதிகம். “அவை எல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடந்தவை ஆயிற்றே அவற்றை எப்படி மறக்க முடியும்?” என்று கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதுதான்.
இந்நிலையில், கடந்த காலத்தின் நினைவுகளை ஆரோக்கியமாக எப்படிக் கையாள முடியும்?
கடந்தகாலத்தின் கடுமையான சூழ்நிலைகளைத் தைரியமாக எதிர்கொண்ட அன்றைய மனநிலையை, இன்றைய மனஉறுதிக்கு உரமாக மாற்றிக்கொள்வதே மனப்பயிற்சி. மேலும், இப்போது அத்தகைய சூழ்நிலைகளில் உள்ளவர்களை உணர்ந்து உதவுகின்ற அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது சிறந்த வளர்ச்சி.
இவ்வாறு, நாம் சந்தித்த கடுமையான சூழ்நிலைகள், வருத்தமான நினைவுகள் போன்றவற்றை, என்றும் நமக்குப் பாதுகாப்பைத் தருகின்ற நேர்மறையான உணர்வுகளாக, வலிமையான அனுபவமாக பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. இவ்வாறு நேற்றைய நினைவுகளின் பதிவுகளை நேர்மறையாக அணுகும் தன்மையே இன்றைய மகிழ்ச்சியை அனுபவிக்கும் தகுதியைத் தருகிறது.
“வண்ணத்துப்பூச்சி அதன் வாழ்க்கையில் கூட்டுப்புழு பருவத்தை உண்மையிலேயே கடந்துவருகிறது. ஆனால், அந்த நிலையை வளர்ச்சியின் வழியில் சந்தித்த மாற்றமாக, நேர்மறையாக ஏற்றுக்கொள்ளும் அதன் அணுகுமுறையால் புதிதாக வளர்ந்த சிறகை விரித்து மகிழ்ச்சியாகப் பறக்கிறது. கடந்தகாலத்தில் இயற்கை தராத வாய்ப்புகளையும் கடுமையான முயற்சிகளின் மூலம் நிகழ்காலத்தில் நாமே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
பெரும்பாலானவர்களின் மனப்பதிவுகளில் அவர்கள் சந்தித்த அவமானங்கள், கோபங்கள் போன்றவை ஆறாத இரணங்களாக மனதில் அப்படியே இருக்கும். அவற்றை எந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் நேர்மறையாக மாற்றமுடியாது என்றும்கூட தோன்றலாம். இன்னும் சிலருக்கு நாட்கள் செல்லசெல்ல அந்தக் கோபம் மேலும் வளர்ந்து அவர்களுக்கே சுமையாகவும் மாறியிருக்கலாம். இத்தகைய நினைவுகளை என்ன செய்ய முடியும்?
சமைத்து உண்ண முடியாத நிலையில் உள்ள உருளைக் கிழங்கை கிப்ட் பேப்பர் சுற்றி யாராவது கையில் கொடுத்துவிட்டால், அதை பார்த்தவுடன் தூக்கிப்போட்டு விடுவதுதான் அப்போதைக்கே முடிந்து விடுகின்ற தீர்வு. இதுவே ஒரு செயலுக்கு மறுசெயல் என்று முடிந்துவிடுகிறது.
அதன் பிறகு பாதிப்பு ஏற்படுத்திய அந்த மனநிலையைப் பழுதுபார்க்க முயற்சி செய்தும் முடியவில்லை என்றால் அத்தகையவர்களிடம் கூடுதலான எச்சரிக்கை உணர்வோடு சற்று விலகியிருப்பது மட்டுமே போதுமானது.
ஆனால், பழிவாங்கும் எண்ணத்தோடு, பதிலுக்கு அதேபோல அவர்களிடம் நடந்துகொள்ள நினைத்து, அன்று மனதில் ஏற்பட்ட உணர்வுகளை எப்போதும் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு (அந்த நிலைமாறிய உருளைக்கிழங்கை கையில் வைத்துக்கொண்டு இருப்பதுபோல) அதன் வாடையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பது முற்றிலும் தேவையற்ற செயல்.
உணர்ச்சிவசப்பட்டவர்களின், இயலாமையின் வெளிப்பாடுகள், ஈகோவின் எதிரொலிகள் போன்ற தாக்குதல்கள் மனதில் நியாயமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தவிர்க்க முடியாத அத்தகைய சூழ்நிலைகளை முடிந்தவரை நிதானமாகப் பக்குவத்துடன் அணுகுவது மட்டுமே நம்மால் முயன்று செய்யக்கூடியது. ஆனால் அதையே எப்போதும் நினைத்துக்கொண்டு எல்லா சூழ்நிலைகளையும் எதிராக மாற்றுவதும், ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதும் நல்ல அணுகுமுறை அல்ல.
எப்போதோ குளிராக இருந்தது என்பதற்காக எந்த நேரத்திலும் போர்த்திக்கொள்வது தேவையற்றது மட்டுமல்ல அது ஆரோக்கிய குறைபாடு. எனவே இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றபடி மனசாட்சியோடு நடந்துகொள்வதுதான் நியாயமான செயல்பாடு.
இன்றைய நிகழ்வுகள்:
மனசாட்சிக்கு நேர்மையாக வாழ்பவர்களாக இருந்தாலும், நடைமுறையில் எப்போதும் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துவிட முடியாது. நாம் மற்றவர்களிடம் சில குறைகளைக் காண்பதுபோலவே நம்மிடம் மற்றவர்கள் சில குறைகளைக் காண்பார்கள் என்பது இயல்பான ஒன்று. அத்தகைய குறைகளையும் ஆராய்ந்து அவற்றில் உண்மை இருந்தால் உணர்ந்து மனப்போக்கை உயர்த்திக்கொள்வது அவரவர் மனவளம் சார்ந்த அணுகுமுறை.
எனவே, தவிர்க்க முடியாத ஏற்ற இறக்கங்களை, இயலாமைகளை, ஏற்றுக்கொள்ள முடியாமல் நம்மையோ மற்றவர்களையோ மனதின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்துக்கொண்டு தினமும் போராடுவதைவிட, மனதளவில் மன்னிப்பதுதான் சிறந்த வழி.
இவ்வாறு உணர்வுகளில் எச்சரிக்கையாக இருந்து, தேவையற்ற எதிர்வினைகள் இல்லாமல் பொறுமையாக இருப்பது இயலாமை அல்லவா, ஏமாளியாக நினைத்து எதிராக செயல்படுபவர்களை எப்படி எதிர்கொள்வது? இதெல்லாம் இன்றைய நடைமுறைக்கு உதவுமா என்ற சந்தேகங்கள் எழுவதும் இயற்கைதான்.
ஒப்பற்ற சக்தியாக, கருணை வடிவமாகத் திகழும் கடவுளையே பலவிதமான கருவிகளோடு நினைத்துப் பார்த்துப் பழகிய மனிதர்கள் நாம். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் எப்போதும் நிராயுதபாணியாக நிற்கக் கூடாது என்பது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அடிப்படை தத்துவம்.
எனவே, நம்மைக் காத்துக்கொள்ளும் கருவியான புத்தியை எப்போதும் சிறப்பாகக் கையாளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். சூழ்நிலையை உணர்ந்து அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற உணர்வுகளைக் கவனமாகக் கையாளும் திறமையும் கொண்டிருக்க வேண்டும். தற்காத்துக் கொள்ள தெரிந்தவனே தன்னைச் சார்ந்தவர்களையும் காக்க முடியும் என்பது உண்மை.
இருட்டில் நடக்கும்போது தேவைப்படுகிறது என்பதற்காக வெளிச்சமான இடத்திலும் டார்ச் லைட் பயன்படுத்துவது தேவையில்லை என்பதோடு அதன் வலிமையும் குறைந்துவிடும். ஆகையால் டார்ச்சையே வைத்திருக்கக் கூடாது என்று கூறவில்லை, அதை பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். நம்முடைய மனதின் உணர்வுகளையும், நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும், தேவைகருதி அளவறிந்து முறையாகக் கையாளுவது நிகழ்காலத்தில் மனஅமைதியைப் பெறுவதற்கான சிறந்த அணுகுமுறை என்றுதான் கூறுகிறேன்.
எதிர்பார்க்கும் வளர்ச்சிகள்:
நமக்கு விருப்பமான குறிக்கோளைத் தேர்ந்தெடுப்பதும், அந்தக் குறிக்கோளை நோக்கி தொடர்ந்து கவனத்தோடு முயற்சிகள் செய்வதும் வாழ்க்கையை ஆக்கபூர்வமாக வைத்துக்கொள்ளும் பயனுள்ள பயிற்சி. இதுவே, தேவையற்ற சிந்தனைகள், பயனற்ற செயல்பாடுகள் போன்றவற்றை தவிர்ப்பதற்கான எளிய வழி.
கட்டுப்பாட்டில் உள்ளவற்றை சிறப்பாகக் கையாள்வதும், அவ்வாறு இல்லாதவற்றை நேர்மறையாக எதிர்கொள்வதும் மனவளர்ச்சிக்குத் துணைசெய்யும் அணுகுமுறைகள். நேர்மறையான சில கட்டுப்பாடுகளை முன்னேற்றத்திற்கான வழிகளாக ஏற்றுக்கொள்வதும், சில பொருத்தமற்ற புரிதல்களைச் சமயோசிதமாக அணுகுவதும் மனவளர்ச்சியை மேம்படுத்தும் பயிற்சிகள்.
சுயமதிப்பை உயர்த்துகின்ற செயல்பாடுகளை நடைமுறையாக்குவதும், இயல்பான வாழ்க்கையை நேர்மறையாக அணுகுவதும் தனிப்பட்ட ஆளுமையை (ஈகோவை) சமநிலையில் செயல்படுத்துகின்ற மனப்பயிற்சிகளாகும்.
மனதின் தகுதி:
நமக்கு நல்ல நட்பாக இருக்கும் நம்முடைய மனதை அன்பாகக் கவனிப்பதும், அதனுடைய செயல்பாடுகளுக்கு அறிவைத் துணையாக்குவதும் மனதை வளமையாக்கும் வழிகளாகும்.
மனவளத்தைக் கெடுப்பது எது, மனவளத்தைக் கொடுப்பது எது என்று சிந்தித்து, தேர்ந்தெடுத்துச் செயல்படுவது மனஅமைதிக்கு வழிவகுக்கும் அணுகுமுறையாகும்.
மற்றவர்களின் செயல்பாடுகளில் perfectionஐ எதிர்பார்ப்பவர்களும்கூட, தங்களுடைய செயல்பாடுகளில் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. எனவே, மனஅமைதியை உண்மையாக விரும்புபவர்களுக்கு Perfection is not a perfect choice என்று புரிந்துகொள்வது மனஅமைதியைத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலையாகும்.
எத்தகைய சிறப்பும் அதற்குரிய தகுதியான இடத்தில்தான் நீடித்து வளர்ந்து வளம் தருகிறது. அதுபோலவே, மனஅமைதி என்னும் மிகச்சிறந்த நிலையும், அதை தக்கவைத்துக்கொள்ளும் திறனுள்ள தகுதியான மனதில்தான் தங்குகிறது.
எனவே, அன்பாக அள்ளித்தருகின்ற இயற்கையின் ஆசீர்வாதங்களுக்கும், உறவு, நட்பு, அறிவு என நாம் பெறுகின்ற நன்மைகளுக்கும், நல்ல அனுபவங்களைத் தருகின்ற வாய்ப்புகளுக்கும் என ஒவ்வொரு பொழுதும் நன்றியை உணர்கின்ற மனவளம்தான், மனஅமைதியை நிலையாகப் பெறுவதற்கான மனதின் சிறந்த தகுதியாக இருக்கிறது.
இத்தகைய தகுதியோடு சுகமான மனஅமைதியைப் பெற்று வளமாக வாழ்வதே நம் அனைவருக்கும் பொதுவான நோக்கமாக இருக்கிறது.
# நன்றி.