தூய நிறத்தில் ஒரு தேவதை
துள்ளிக் குதித்துப் பறந்து வந்தாள்.
கரிசல் நிலத்தில் கால் முளைத்து
காய்த்த பின்னே பூத்து நின்றாள்.
இனப்பயிரோடு இணைந்து வளர்ந்து
பணப்பயிராக வெடித்துச் சிரித்தாள்.
காற்றோடு கைசேரும் மேகப்பந்தாய்
பார்த்தவிழி பூத்தபடி காத்து நின்றாள்.
வெயிலோடு விளையாடி காய்ந்தாலும்
வாடிவதங்காத வெண்ணிறம் கொண்டாள்.
இடத்துக்கேற்ற வடிவம் மாற்றி
இலகுவாய் வாழும் வழியும் கண்டாள்.
வெம்மையின் தாக்கம் தான் வாங்கி
நம்மை காக்க தினமும் துணிந்தாள்.
பருத்தி என்றொரு பெயரில் ஒருத்தி
இதம் தரும் இழையில் உடை தந்தாள்.
வாச மலர்களும் வணங்கும் வண்ணம்
நேசம் கமழும் ஆடையானாள்.
# நன்றி.
