சிந்தனை செய் மனமே:
நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது.
ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும் நம் சிந்தனைகளே பொறுப்பு ஆகின்றன. எனவே, நம் எண்ணங்களைச் சீர்படுத்தக் கூடிய நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்வதும் உயர்ந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதும் நமது பயணத்தை மேலும் எளிமையாக்கும்.
கட்டளைக்கல்:
“பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக் கல்”.
என்பது போல, நம்முடைய செயல்களே நம்முடைய பெருமைக்கும், சிறுமைக்கும் வெளிப்படையான சாட்சிகளாக இருக்கின்றன. எனவே “செயல்கள்” என்பது தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வு அல்ல. பெரும்பாலும் நம் மனநிலையின் வெளிப்பாடுகள்தான். நம் சிந்தனைகளின் உயர்வே, நமது செயல்களையும் உயர்த்தும்.
பட்டர்.:பிளை தியரி:
நம்முடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றினைந்துதான் இந்த உலகத்தின் செயல்பாடுகளைக் கட்டமைக்கிறது. இதையே எட்வார்ட் லாரன்ஸ் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம் “கேயாஸ் தியரி” என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்தக் கோட்பாட்டின்படி, “ஒரு ஊரில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி சிறகின் படபடப்பு, சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு ஊரில் ஒரு பெரிய வளிமண்டல மாற்றம் உருவாகக் காரணமாக அமையவும் வாய்ப்பு உண்டு.” என்கிறார். இவ்வாறு செயல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதால்தான் உலகியல் இயக்கங்களும், தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்றும் தனது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துக் காட்டி உள்ளனர்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் அசைவுக்கே அவ்வளவு சக்தி உள்ளது எனில், நம்முடைய அசைவுகள் கூட உலகத்தின் மாற்றத்திற்குக் காரணமாக அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே நாம் அசைந்தாலும் அசையும் அகிலம் எல்லாமே என்று இந்தத் தியரி கூறுகிறது.
உலகில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ சொன்ன செய்திகளும், செயல்களும் இன்றைய நம் செயல்களுக்குக் காரணமாக இருப்பது போல, இன்றைய நம்முடைய சிந்தனைகளும், செயல்களும் வருங்காலத்தின் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையும் என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும்.
சங்கிலித் தொடர்:
நடைமுறையில், ஒருவருடைய செயல் மற்றவரின் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனைகளே சமுதாய முன்னேற்றத்திற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது. இதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் தனி நபர் அல்ல ஒரு பெரிய சங்கிலித் தொடரின் ஒரு பகுதி என்பதை உணர முடியும்.
படபடப்பை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளினால், உணர்வுநிலை பாதிக்கப்பட்டவர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் இருக்கும் இடத்தையும் பதட்டநிலைக்கு மாற்றுகின்றனர் என்பது உளவியல் உண்மை.
ஒருவருடைய உணர்வுகள் மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவும் என்பதால், மனபதட்டமும் அவ்வாறே, கொரோனாவை விட வேகமாகப் பரவுகிறது. எனவே, ஒரு தனி மனிதனுக்கு உருவாகும் பதட்டம், காரணமே இல்லாமல் (அல்லது மிக சிறிய காரணங்களுக்கு) சூழ்நிலை முழுவதும் பதட்டமாகிறது. இதுவே, அதிக அளவில் கோபமாகவும், வெறுப்பாகவும் சமுதாயத்தில் வெளிப்படுகிறது. விதைப்பது வினையா, திணையா என்ற புரிதல் இல்லாமல் செயல்படுபவர்களால் ஏற்படும் விளைவுகளை மொத்த சமுதாயமும அறுவடை செய்கிறது.
“மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்”.
ஆகவே, மனநலம் நமக்கு ஆக்கம் தந்து வளமான வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். மேலும், இத்தகைய மனநலம் உள்ளவர்களின் நட்பு நமக்கு கூடுதலான நல்ல புகழையும் தரும், என்று வள்ளுவர் நமக்கு வழி காட்டுகிறார். எனவே, நமது மனநலனைக் காப்பது, நமக்கு நன்மை செய்வதோடு சமுதாயத்திற்கே நன்மை சேர்க்கும் நல்வழியாகும்.
இயற்கை:
நம்முடைய சுற்றுப்புறத்தில் இயல்பாக உள்ள காற்று, நாசியின் வழியாக நுரையீரலுக்குச் சென்ற பின்னர் அங்குள்ள இரத்தச் சிவப்பணுக்கள் அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் தேர்வு செய்து நமக்கு உயிர் சக்தியை அளிக்கிறது.
இவ்வாறு, நம் உடலுக்குத் தேவையான நல்ல ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் தன்மையை நம் உடலமைப்புப் பெற்றிருப்பது இயற்கையின் அற்புதம். அதற்கு உதவியாக நாம் ஒத்துழைப்புக் கொடுப்பது நமது உயிர் தேவை, இதுவே நமது அடிப்படை கடமை.
(சில சமயங்களில் நச்சு வாயுக்கள் நாசியின் வழியாக உள்ளே சென்று விட்டால் அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.)
இதைப் போலவே சுற்றுப்புறத்திலும் எது பயனுள்ளவையோ அதை மட்டும் உட்கிரகிக்கும் பழக்கத்தைக் கொண்டுவரவேண்டும். தேவையற்ற, பொறுப்பற்ற பொழுதுபோக்குகளால் நேரம் வீணாவதோடு, மனதும் மெல்லக் கெட்டு, சுற்றுப்புறத்தையும் வேகமாகக் கெடுக்கிறது.
பொழுதுபோக்குகளே பெரும்பாலும் நம் சிந்தனைகளைத் திசைத் திருப்புகின்றன என்பதால் தரமான, பயனுள்ள பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மனமுதிர்ச்சி:
மனமுதிர்ச்சி என்பது வயதைப் பொறுத்து அமைவதில்லை. அனுபவம் தந்தப் பாடங்களையும், அனுபவப்பட்டவர்கள் சொன்ன பாடங்களையும் மனதில் நிறுத்தி, “சுய சிந்தனையோடு” வாழ்க்கையை அணுகுபவர்களே மனதில் பக்குவப்பட்டவர்கள் ஆவார்கள்.
சொல்லப்படும் செய்திகள் பழைமையா, புதுமையா என்பது முக்கியமில்லை. இன்றைய வாழ்க்கைக்குப் பயனுள்ளவையா என்பதே முக்கியம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட நல்ல நெறிகளும், வழிகாட்டுதலும், இன்றும் மக்களுக்குப் பயன்தரும் வகையில் இருப்பதால் அவற்றை அனைவரும் போற்றி பாராட்டுகிறார்கள்.
இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும், பயனுள்ள, பண்பை வளர்க்கும் செய்திகளைத் தெரிந்துகொள்வோம். அனைவரும் நல்ல சிந்தனைகளையே நாடி, நாளும் பகிர்ந்து கொள்வோம்.
நம் சிந்தனைகளின் வெளிப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்து, சரியான செயல்களைச் செய்து வந்தால்தான், அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாப்பான, நம்பிக்கையான சமுதாயத்தை ஒப்படைக்க முடியும்.
பிரபஞ்சத்தின் சக்தி:
நாம் மனதில் எதை நினைத்துத் தேடுகிறோமோ, அதுவே நம் உழைப்புக்கு ஏற்றபடி நம்மை வந்து சேரும். உதாரணமாக, நாம் ஒரு குறிப்பிட்ட ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள வலைதளத்தில் முயன்றால் உடனே அது தொடர்பான பலசெய்திகள் நம் பார்வைக்கு வந்துவிடும். இந்தத் தொழில்நுட்பத்தை வலைதளம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் அறிந்திருப்போம்.
இதுபோலவே, பிரபஞ்சமும் நம் தேடல்களின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரும். இதனால்தான் எப்போதும் நல்ல சிந்தனைகளால் மனதை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு நொடியையும் கவனமாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்துவதால் நம்மை சுற்றி சுமுகமான சூழ்நிலைகள் உருவாகும்.
# நல்ல சிந்தனைகளைத் தொடர்ந்து படித்து, உங்கள் அன்பைப் பகிரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.