மின்சாரமும் சம்சாரமும்:

மின்சாரம்:
இன்றைய அறிவியல் உலகின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் மின்சாரம், நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பலவகையான நவீனக் கருவிகளை இயக்கும் சக்தியாக, தேவைக்கு ஏற்ற அளவில் முறைப்படுத்தும் வாய்ப்பு உள்ள மாபெரும் ஆற்றலாக விளங்குகின்றது.
கருவிகள் :
இடத்திற்கு ஏற்றபடி பொருத்தமாக இணைக்கப்பட்ட மின்ஆற்றல் இருந்தாலும், வெளிச்சம், காற்று என நாம் விரும்பும் பலன்கள் அதிலிருந்து நேரடியாகக் கிடைப்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாத மின்னாற்றலின் சக்தி, இயங்கும் கருவிகளின் இயக்கத்தினாலேயே பயன்களாக வெளிப்படுகின்றன.
இணைப்புகள்:
இத்தகைய பயன்களைப் பெறுவதற்கு மின்னாற்றல் மற்றும் இயங்குகருவிகள் ஆகியவை மிகமிக அவசியம் என்றாலும் இவை இரண்டையும் பாதுகாப்பாக இணைக்கும் துணை இணைப்புகளின் பங்கும் இதில் கணிசமாகத் தேவைப்படுகிறது.
எச்சரிக்கையாகக் கையளவேண்டிய மின்ஆற்றலும், இயக்கத்திற்கு தயாராக உள்ள (light, fan, fridge, cellphone போன்ற) கருவிகளும், இவற்றை இணைக்கும் (switch, regulater, stabilizer, charger போன்ற) துணை இணைப்புகளின் ஒத்துழைப்பும் முறையாக இருந்தால்தான் கருவிகளின் இயக்கம் சிறப்பாக வெளிப்படுகிறது.
பலன்கள்:
தகுதியுள்ள கருவிகளும், பாதுகாப்பான மின்சாரமும், பொருத்தமான துணை இணைப்புகளும் முறையான தொடர் அமைப்பாக இணைக்கப்படுகின்ற நிலையில் மட்டுமே மின்சாரத்தின் ஆற்றல் நாம் எதிர்பார்க்கும் முழுமையான பலன்களைத் தருகின்றது.
ஒருவேளை, அத்தகைய பலன் கிடைக்காத நிலையில், அந்த தொடர்அமைப்பில் குறைபாடு உள்ள இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, அந்தக் குறைபாட்டை நீக்கி, சரியாக அமைக்க வேண்டிய பொறுப்பு, அதன் பலனை உரிமையோடு அனுபவிக்கும் நமது கடமையாக உள்ளது.
இவ்வாறு மின்சாரத்தைப் பயன்படுத்தி கருவியின் பலன்களைப் பெறுவதில் உள்ள வழிமுறைகளைப் போலவே, நம்முடைய சிந்தனைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையின் பலன்களை பெறுவதில் உள்ள வழிமுறைகளும் பெருமளவு ஒத்து இருக்கின்றன
சிந்தனைகள் :
சந்திக்கும் சூழ்நிலைகளைச் சுயஅறிவோடு கையாளுகின்ற நம்முடைய தனிப்பட்ட இயல்பு, கற்றுக்கொள்ளும் அறிவு, பெற்றுக்கொள்ளும் அனுபவம் போன்றவற்றின் மூலம் நம்முடைய சிந்தனைகள் படிப்படியாக மேம்படுகின்றன.

உலகத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகளின் மூலம் கிடைக்கும் புதிய சிந்தனைகளின் சக்தி, புதுப்புது இணைப்புகளில் எல்லாம் பாய்கின்ற மின்னாற்றல் போல நமது சிந்தனைகளில் ஊடுருவி புதிய மாற்றங்களை உருவாக்குகின்றன.
அவை, பழைய கருத்துகளில் ஏற்படுகின்ற மாற்றங்களாகவோ அல்லது புதியதாக உருவாகின்ற கருத்துகளாகவோ அமைந்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் உள்ள பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகின்றன. இத்தகைய “நேர்மறையான, ஆக்கபூர்வமான” சிந்தனைகளால் உருவாகின்ற புத்துணர்ச்சி, பாதுகாப்பான மின்சாரம் போல ஆற்றல் மிக்க சக்தியாக செயல்படுகிறது.
“உங்களால் கனவு காண முடிந்தால், உங்களால் அதை மெய்யாக்க முடியும்” என்ற ஜெஃப் கெல்லரின் உண்மையான வார்த்தைகள் நமது சிந்தனையின் சக்தியை உறுதியாகக் கூறுகின்றன. எனவே, நிலையான குறிக்கோளின் உறுதியான வெற்றியை நமக்குள் காட்சிப்படுத்துகின்ற நம்பிக்கையின் பயிற்சி, நம்மை வெற்றியை நோக்கி உழைப்பதற்கான சக்தியைக் கொடுத்து, நிச்சயமான வெற்றியை நமக்கு பரிசளிக்கிறது.
நம்முடைய குறிக்கோளின் வெற்றியைத் தெளிவாகக் காட்சிப்படுத்திப்பார்க்கும் கனவுகளின் வெற்றி நம்முடைய மனதிலிருந்துதான் தொடங்குகிறது. தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக்கொள்ளும் மனம், விழிப்போடு உருவாக்குகின்ற செயல்திட்டத்தை, மனத்திரையின் ஒத்திகையில் மேம்படுத்துவதால் கிடைக்கும் ஆற்றல், ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முறையாக வெளிப்படுத்துவதற்கு உந்தித் தள்ளுகிறது.
செயல்பாடுகள் :

வெகு நிச்சயமாக, நடைமுறையில் நிகழும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் சிறப்பான செயல்பாடுகளால்தான் வெற்றிகரமாக நிறைவேறுகின்றன. நோக்கத்தின் வெற்றியை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் எதார்த்தமாக வெளிப்படுகின்ற தனிமனிதச் செயல்பாடுகள் அடிப்படை கட்டமைப்பாக உள்ள வாழ்க்கையை ஒளிரும் மாளிகையாக உயர்த்துகின்றன.
குறிக்கோளை நோக்கி, திடமான நம்பிக்கையுடன் செயல்படும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செயல்திட்டமும், வியூகமும் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரு திட்டம் என்பது விடாமுயற்சி எனும் மனவுறுதியின் திட்டமாகும்.
வெற்றியை நோக்கி பெருமுயற்சியோடு செயல்படுகின்ற காலம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலஅளவாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலஅளவில் செயல்படுகின்ற முயற்சியின் தீவிரமே வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் தகுதியாகும்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை உண்டு என்கிறார்கள். அப்படியானால், சிறந்த குறிக்கோளில் வெற்றி பெறுவதற்கு தீவிரமான முயற்சியும், முறையான உழைப்புமே விலையாக இருக்க முடியும்.
இத்தகைய தொடர் முயற்சிகளின் அணிவகுப்பே நம்முடைய வாழ்க்கையை ஆக்கபூர்வமான செயல்கள் நிறைந்த அடர்த்திமிக்க வாழ்க்கையாக உயர்த்துகின்றது.
விழிப்புணர்வு :

மின்சக்திக்கும், இயங்கு கருவிகளுக்கும் இடையில் முறைப்படுத்தும் துணை கருவிகளான ஸ்விட்ச், ரெகுலேட்டர், ஸ்டெபிளேஸர், சார்ஜர் போல, சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் பலவகையில் பாதுகாப்புத் தருகின்ற இணைப்புக் கருவிகள் செயல்படுகின்றன.
நம்முடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஸ்விட்ச், வேகத்தை முறைப்படுத்தும் ரெகுலேட்டர், சிந்தனைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கிக்கொண்டு சீராக வழிநடத்தும் ஸ்டெபிளேஸர், இயங்குவதற்கான சக்தியையும் ஊக்கத்தையும் கொடுக்கும் சார்ஜர் என நம்மை சுற்றியுள்ள ஏராளமான இணைப்புகளின் துணையோடுதான் நாம் சமுதாயத்தில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
இந்த இணைப்புகள் என்பவை, நாம் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைகள், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள், அணுகுமுறைகள், நட்புகள், விருப்பங்கள் போன்று பலவிதமான துணை இணைப்புகளாக உள்ளன. இவை நம் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் தொடர் இணைப்புகளாக நின்று நம்முடைய இயக்க ஆற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்த உதவுகின்றன.
இவ்வாறு நம்முடைய சிந்தனைகளோடு தொடர்பு கொண்டு, நமது செயல்பாடுகளுக்கு உதவுகின்ற இத்தகைய துணை இணைப்புகள், நம்முடைய இயக்கத்திற்கு பொருந்துகின்ற பொருத்தமான இணைப்பாக, பழுது இல்லாமல் பாதுகாப்புத் தருகின்ற இணைப்பாக இருக்கும் நிலையில் மட்டுமே சிந்தனையின் ஆற்றல் செயல்வடிவம் பெறமுடியும்.
மேலும், நம்முடைய செயல்களுக்கு துணையாக உள்ள இத்தகைய இணைப்புகளே நம்முடைய பண்பையும், நம்முடைய செயல்களின் தன்மையையும் அடையாளம் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு சார்ஜரைப் பார்த்தவுடன் அது, குறிப்பிட்ட அளவு மின்னேற்றத்தைத் தக்க வைத்துக்கொண்டு செயல்படும் வாய்ப்பு உள்ள கைப்பேசிப் போன்ற கருவிக்கானது என்று அடையாளம் காட்டுவது போல, நம்முடைய துணை இணைப்புகள் நம்மை அடையாளம் காட்டுகின்றன.
எனவே, நம்முடைய செயல்பாடுகளுக்கு நம்முடைய சிந்தனைகள் அடிப்படையாக இருப்பதுபோலவே, நம் “சிந்தனைகளோடு இணைப்பில் இருக்கும்” விதவிதமான துணை இணைப்புகளும் விளைவுகளில் முக்கியமான மாற்றங்களை நிகழ்த்துகின்றன. எனவே இத்தகைய இணைப்புகளை முறையாகக் கையாளும் விழிப்புணர்வு நம்முடைய செயல்களை மேலும் செம்மையாக்குகின்றன.
அதேபோல நாமும் நம்முடைய செயல்களும்கூட மற்றவர்களின் செயல்பாடுகளுக்குத் துணையாக சிந்தனைகளின் இணைப்புகளில் இருக்கலாம் என்பதால் நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும் விழிப்புணர்வு ஆகும்.
வாழ்க்கை:

எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளும், கடினமான சவால்களும், பலவிதமான உணர்வுகளும் கலந்த கலவைதான் வாழ்க்கை என்று அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்கின்ற நமக்கு நன்றாக தெரியும்.
இத்தகைய வாழ்க்கையில் நம்முடைய வெளிப்பாடுகள் மற்றும் நாம் கையாளுகின்ற செயல்கள், நமக்கும் சகமனிதருக்கும் இணக்கமான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியே நம்முடைய வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது.
இந்த முயற்சி உள்ளார்ந்த அக்கறையாக, உண்மையான செயல்பாடுகளாக இருக்கும்போது இதுவே நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்ற செயலாக வளர்கிறது. இதற்கு மேலும் தொடரும் முறையான உழைப்பின் தகுதிக்குப் பரிசாகக் காலத்தால் கனியும் வெற்றிகள் ஆற்றல் மிக்க கூடுதலான பலன்கள் ஆகும்.
நம்முடைய செயல்பாடுகள் யாவும் நமது சிந்தனைகளை ஆதாரமாகக் கொண்ட வெளிப்பாடுகள்தான் என்றாலும் நமது சிந்தனைகள் செயல்பாடுகளாக வெளிப்படுவதற்கு துணையாக இருக்கும் இணைப்புகளும் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.
நமது சிந்தனைகள், செயல்பாடுகள், உதவும் இணைப்புகள் ஆகியவை முறையாக இணைந்து உருவாகும் கட்டமைப்பே வாழ்க்கையாக வளர்கிறது. நேர்மறையான முன்னேற்றம் என்ற ஒரே நோக்கத்தோடு இணையும் இந்த அமைப்பு, விழிப்புணர்வு எனும் கவனத்தோடு இயங்குவதே வாழ்க்கையின் வெற்றியாக சிறப்பாக ஒளிர்கிறது.
# நன்றி .
.