இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.

 

நீலவானப் பட்டிலே
நிறைவான தாரகைகள்
முகமெங்கும் பொலிவோடு
முழு மதியாள்  வந்து விட்டாள்!

குளிர் தென்றல் காற்றாட
கொடிமல்லிச் சேர்ந்தாட
வரவேற்கும்  வாழைமடல்
சாமரமும் விரித்தாட!

குலை தாங்கும்  வாழைமரம்
காய்கனிகள் தந்தாட
தென்னங்  கீற்றிடையே
தென்றல் வந்து விளையாட!

தெவிட்டாத தேன் உண்டு
தெளியாத வண்டொன்று
இரீங்காரம் பாடியே
கச்சேரி அரங்கேற்ற!

முல்லை தன்  வாசத்தால்
முற்றத்தைக்  கிறங்கடிக்க
முழுமதியாள் பெண்ணவளோ
மனம் மயங்கப்  பாடுகின்றாள் !

இனிமையான இரவினிலே
இதமான கீதமொன்று
இன்னுமிது வேண்டுமென்று
இயற்கையும் ரசித்திருக்கும்!

பால் நிலவின் ஒளி பொங்க
பனித்துளிகள் இலைதங்க
பாவை பாடும் குளுமையிலே
பாரெல்லாம் தூங்குதம்மா !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *