வாய்ப்புகளை வசமாக்கும் வழிகள்: Vaaippukalai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்:
   
எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில்
எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது. 
ஏனெனில் சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறும் மனஉறுதி உலகமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது என்று உணர்த்த, அந்த மனஉறுதிக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் உலகம் இதைக் கொண்டாடுகிறது. 
உயர்ந்த சிகரம், குளிர்ந்த தட்பவெப்பநிலை, பிராணவாயு (0xygen) குறைபாட்டினால் ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள், இதுபோன்ற  சவால்களை எதிர்நோக்கிய அவர்களின் திட்டமிடல்கள், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய அடிப்படை பாடமாகும்.
சவால்கள் :
சிறந்த திட்டமிட்ட மலையேற்றத்திலும் எதிர்பார்த்ததைவிட மிகக் கடுமையான சூழ்நிலைகளும், உடன் பயணித்தோரின் இழப்புகளும் ஏற்படலாம்.  அதனால் ஏற்படும் மனஅழுத்தம் மிகக்  கடினமான சவாலாகும். 
முன்வைத்தக் காலை பின்னிழுக்கும் கயிறுகளான இவை அனைத்தையும் தகர்த்தெறிந்து, விடாமுயற்சியோடும், மிகுந்த மனஉறுதியோடும், தன்னிலையில் சற்றும் தளராது, தன்னையே தான் வெற்றி கொள்ளும் மனவுறுதியைப் பாராட்டவே, இதை உலகம் கொண்டாடுகிறது.  இதுவே, வாழ்க்கையின் நேர்மையான குறிக்கோள்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய மாறா நிலைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. 
வாழ்க்கை :
வாழ்க்கை என்பதே வாய்ப்புகள்தான். ஒவ்வொரு நிலையிலும், நம் கண்முன்னே விரிந்திருக்கும் வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொருத்துதான் வாழ்க்கை அமைகிறது . 
 
“முயன்றவர் எல்லாம் வென்றவர் ஆகார், தன்னை வென்றவரே முயன்றவர்  ஆவார்”.  தடைகளற்ற பயணம் என்பது இல்லவே இல்லை. சரியான திட்டமிடல்களும், முன்னேற்பாடுகளும், வெற்றியை நோக்கிய பயணத்திற்கு உதவிடலாம். ஆனாலும் முழுமையான வெற்றியென்பது அவரவர் மனஉறுதியைப் பொருத்தே அமைகிறது. 
 
வாய்ப்புகள்:
அதிகாலையில் கண் விழிக்க வேண்டும் என நினைப்பது திட்டமிடல். விழிப்புமணியை (அலாரம்) அமைத்துக் கொள்வது முன்னேற்பாடு.  காலையில் மணி ஒலித்தவுடன் நம் முன்னே இருக்கும் வாய்ப்புகளில் நாம் எதைத்  தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொருத்துதான் அடுத்தச் செயலும் அதன் விளைவும் நிகழ்கிறது.  
எனவே, வெற்றி என்பதும் தோல்வி என்பதும் தனியாக ஒன்றுமில்லை அனைத்துமே நாம் தொடர்ந்து செய்யும் செயல்களின் வாய்ப்புகளால் நிகழும் விளைவுகளே.
முயற்சி திருவினையாக்கும்:
 
வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி தோல்வி என்பது கடந்து செல்லும் காட்சிகள்தான் என்றாலும் அவற்றை நேர்மறையாக ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் வெற்றியாகும். 
வெற்றி என்ற வாய்ப்பை விரும்பும் நிலையில், மிகச்சரியான, நமக்குப் பொருத்தமான குறிக்கோளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். 
அதற்குச் செய்யவேண்டிய நியாயமான முயற்சியையும், முறையான பயிற்சியையும், கடின உழைப்பையும், நல்ல வாய்ப்பாகக் கருதி  பயன்படுத்தவேண்டும். 
 
மனஉறுதியை ஒரே வாய்ப்பாகக் கொண்டு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து உறுதியாக நடக்கவேண்டும். 
இவ்வாறு, குறிக்கோளைக் கவனத்தில்கொண்டு, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, சூழ்நிலைகளை விழிப்புணர்வோடும், நேர்மறையாகவும் எதிர்கொள்வது வாய்ப்புகளை வசமாக்கும் வழிகளாகும்.  
#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *