அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும், நட்பு உயர்ந்த நாகரிகமாகப் போற்றப்படுகிறது.
அனைவருமே விரும்பும் இந்த நட்பு சாத்தியமாவதற்கு முக்கியமான சில பண்புகள் அவசியம் என்றும், நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே ஒருவரை நட்பு கொள்ளவேண்டும் என்றும் சான்றோர் கூறுகின்றனர். நேர்மையானவருடன் அன்போடு பழகுவது நமது சமூகக்கடமை. அதற்கும் மேலாக, அவருடைய தன்மையை ஆராய்ந்து பார்த்தப் பின்னரே நட்போடு பழக வேண்டும் என்பதன் அவசியம் என்ன?
மனம், நம்முடைய பலம், பலவீனம் ஆகியவற்றை நன்கு தெரிந்து, அமைதியாக நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய மனதிற்கு மிக நெருக்கமாகும் நண்பர், நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனதின் சாட்சியாக, நமது மனசாட்சியின் வடிவமாக இயங்கும் பாதுகாப்பானவராக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமான தகுதிதானே.
மேலும், நெருக்கமான நண்பர் கூறும் கருத்துகள், ஆலோசனைகள், செயல்கள் போன்றவை கப்பலைத் திருப்பும் சுக்கான் போல வாழ்க்கையின் திசையைத் திருப்பும் சக்திப் பெற்றவை. எனவே, நாம் எத்தகையவர் என்பதை பிரதிபலிக்கக்கூடிய நட்பை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும் என்று காலந்தோறும் சான்றோர்கள் கூறுகிறார்கள்.
- உணர்வுகளின் அடிப்படையில் உண்மையாகப் பழகுவது.
- ஒரே கருத்தோடு, இயன்ற வழிகளில் எல்லாம் துணை நிற்பது.
- நண்பரின் தனிப்பட்டத் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவது.
- முன்னேற்றம் தரக்கூடிய பொருத்தமான குறிக்கோளைக் கண்டுபிடிக்க உதவுவது.
- தயக்கம், பயம் போன்றவற்றை விலக்கி, முக்கியமான, முன்னேற்றமான செயல்களைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவது.
- முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரங்களில் சுயநலமில்லாமல் நேர்மையாக வழிகாட்டுவது.
- அவரவர் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிப்பது.
- வெற்றியிலும், தோல்வியிலும் மனதளவில் உடனிருந்து, மாறாத மனநிலையோடு நம்பிக்கைத் தருவது.
- ஆறுதலான வார்த்தைகளால் மனப்பதட்டத்தைக் குறைத்து ஊக்கம் அளிப்பது.
- கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும் நிலையில் மனதின் நடுக்கத்தைப் போக்கி, நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் (mental support) பாதுகாப்பை உருவாக்குவது.
- ஒருபோதும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல், எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது.
- நண்பரைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் மற்றும் அவரே தன்னிடம் மனம்விட்டுப் பேசியவற்றை வெளிப்படுத்தாமல் காப்பது.
- மேலும், அவை கிட்டத்தட்ட மறக்கப்படவேண்டியவை என்கிற உணர்வோடு பழகுவது.
- சிரித்துப்பேசி மகிழ்வதோடு மட்டும் அல்லாமல், முழுமையான பாதுகாப்பும், நம்பிக்கையும் பகிர்வது.
- பாராட்டுக்குரிய செயல்களைக் கவனித்துத் தேவையான அளவு பாராட்டுவது.
- மகிழ்ச்சிக்காகப் போலியாகப் புகழாமல், சரியான கணிப்புகளைச் சொல்வது.
- தவறுகளை மறைக்காமல் உண்மையாக நடந்து கொள்வது.
- நல்ல வழியிலிருந்து சிந்தனைகள் தவறும்போதே அதை எடுத்துக்கூறி, திருத்தி, நல்வழிக்குத் திருப்புவது.
- தவறுகளைத் திருத்தும்போது மனம் பாதிக்காத வகையில் பக்குவமாகச் சொல்லித் திருத்துவது.
- நேர்மறையான இரண்டு செய்திகளுக்கிடையில் (sandwich போல) திருத்த வேண்டிய தவறைக் குறிப்பிட்டு, அந்தத் தவறு இல்லாமல் இருந்தால் இந்தச் செயல் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தைப் பக்குவமாக ஏற்படுத்துவது.