மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

 

 

பயத்தின் முகம்

 

ஓட்டுக்குள் ஒளிந்து, 

தற்காத்துக்கொள்ளும் 

தயக்கமும்,

முட்களைச் சிலிர்த்தபடி, 

தாக்குதலுக்குத் தயாராகும்  

பதட்டமும், 

பயத்தின் எல்லைக்குள் 

நிறம் மாறுகின்ற 

ஒரே முகம்தான்.

 

வலிமையின் முகம்.

 

தடையைத் தாண்டுவதும்,

தாக்குதலைத் தகர்ப்பதும்;  

கணிக்கப்பட்ட நகர்வாக 

திடமான வல்லமையோடு 

வெளிப்படுவதே  

வலிமையின் முகம்.

 

சுயநல முகம்.

 

நேர்மையை  

அலட்சியப் படுத்துவதும்,   

பொதுவான உரிமைகளைத்  

தனதாக்கிக் கொள்வதும் 

வெட்கமின்றி முகம்காட்டும் 

சுயநலத்தின் ஆணவம்.

 

பொய் முகம்:

 

முறுவலோடு 

முதுகைத் தடவி, 

முன்னே நீட்டப்படும்

எலும்புத் துண்டு, 

தன்னுடைய 

விலாவிலிருந்து 

உருவப்பட்டதுதான்  

என்று அறியும்வரை   

துரோகத்தின் 

வலி தெரியாது.

 

புதுமுகம்:

 

மானுடம் என்பதும் பழங்கதைதான், அதன்    

மகத்துவம் என்பதும் பழங்கதைதான். 

சிந்தனை என்பதும் பழங்கதைதான்; அதில்  

சேரும் மாற்றம் மட்டுமே புதுக்கதையாம். 

 

நன்மையும் தீமையும் புதிதில்லை 

ஏற்பும் மறுப்பும் புதிதில்லை 

உயர்வும் தாழ்வும் புதிதில்லை;  நிலை

மாறும் எல்லைகள் மட்டுமே புதிதாகும். 

 

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *